img
img

நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்
திங்கள் 21 ஆகஸ்ட் 2023 15:19:23

img

கோலாலம்பூர், ஆக. 21-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மடானி பொருளாதாரம்: மக்களுக்கு அதிகாரமளிக்கும் எனும் ஒரு முன்முயற்சித் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதன்போது உரை நிகழ்த்துகையில் இரு முக்கிய அம்சங்களை பிரதமர் வரையறுத்துக் காட்டினார். அவற்றில் ஒன்று, மடானி பொருளாதாரமானது நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பை ஏற்படுத்துகிறது. இதன் வாயிலாக ஆசிய பொருளாதாரத்தின் முன்னணி நாடாக மலேசியா திரும்ப முடியும் என்பது.

இரண்டாவது, அதிகரித்த பொருளாதார உந்துசக்தி, முதலீடுகளின் ஊக்குவிப்பு, உலகச் சந்தைக்கு ஏற்ப புத்தாக்கம், போட்டா போட்டி ஆகிய ரீதிகளில் உள்நாட்டு தொழில்துறைகளை வலுப்படுத்துவதன் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து வலுப்படுத்துவது ஆகியனவாகும்.

இது பற்றி மேலும் ஆழமான கருத்துகளை பெறும் வகையில் நாட்டின் பொருளாதார நிபுணரான டாக்டர் நூங்சாரி அஹ்மட் ரடியுடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு:

மடானி பொருளாதாரம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சமூகக் காரணிகள், மதிப்புகள், சமூக விதிமுறைகள் வாயிலாக பொருளாதார மேம்பாடுகளும் வளர்ச்சிகளும் உருவாக்கப்படுகின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையிலானதுதான் மடானி பொருளாதாரம். ஆகவே, இந்த சமூக காரணிகளின் அடிப்படையில்தான் ஒரு கொள்கையும் பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமும் அமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாகத்தான் மடானி பொருளாதாரம் நன்மதிப்பையும் மேம்பாட்டையும் வலியுறுத்துகிறது என டாக்டர் நுங்சாரி கருத்துரைத்தார்.

அது மட்டுமின்றி, காலஞ்சென்ற துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா எதிர்பார்த்தபடி மலேசியாவின் உருவாக்கத்தின் அடித்தளத்திற்கு ஏற்பவும் இது அமைந்துள்ளது. மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன கடந்த காலத்தின் சில கொள்கைகளும் நமக்கு பாடமாக அமைய வேண்டும். 2020 தூரநோக்கு லட்சியம் முதல் புதியப் பொருளாதார கொள்கை வரை இதை குறிப்பிடலாம். அளவு வைத்து இதன் இலக்குகளை அடைய முற்பட்டாலும் அந்த இலக்குகள் நிறைவேறாமல் போனது மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட வளர்ச்சிகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மடானி பொருளாதாரத்தின் அடிப்படை லட்சியம் என்ன?

அப்படியானால், மடானி பொருளாதாரத்தின் அடிப்படை லட்சியம் என்ன என்று நாம் கேட்கலாம். நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகவும் மெதுவாக நகர்கின்றது. அதன் வளர்ச்சி விதிதம் குறைந்து வருகிறது. அதன் பொருளாதாரம் மற்றும் வளங்களின் விநியோகத்தில் சமநிலையற்ற தன்மை, முதலீடுகளின் நம்பிக்கையை ஈர்க்கும் அளவிற்கு போட்டாபோட்டி தன்மையை இழந்துள்ள பொருளாதாரம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் சீரமைக்கும் கட்டமைப்பைக் கொண்டது மடானி பொருளாதாரம் என்று டாக்டர் நுங்சாரி விளக்கம் அளித்தார்.

இது நாட்டின் பொருளாதார வல்லமையை மீட்டுத்தருகிறது என்பதுடன் மக்களின் நலனையும் நாட்டின் போட்டாபோட்டி தன்மையையும் அதிகரிக்கும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அடித்தளத்தை வலுப்படுத்தி, தரையை உயர்த்தி, கூரையை உயர்த்தி, தூண்களை உருவாக்குவதன் வாயிலாக மலேசியா என்ற வீட்டை மறுசீரமைப்பு செய்கின்றது மடானி பொருளாதாரத்தின் கட்டமைப்பு. இதன் அடிப்படை நோக்கம் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு சமூக பாதுகாப்பு வலையை வழங்குவது ஆகும். வளர்ச்சியையும் போட்டாபோட்டி தன்மையையும் உருவாக்குவதுதான் கூரை; மலேசியாவின் வீடு - அரசு துறை, தனியார் துறை, மூன்றாவதாக இக்கொள்கையால் வலியுறுத்தப்படவிருக்கும் தன்னார்வலர் துறை (லாபத்திற்காக அல்ல); டிரஸ்ட்/வாக்காஃப் ஆகிய துறைகளின் வளர்ச்சிதான் தூண்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் மடானி பொருளாதாரத்திற்கும் அதிகமான வேறுபாடுகள் எதுவுமில்லை. இரண்டுமே மக்களுக்கு நன்மை கிடையாது என்று சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்களே?

இது குறித்து கருத்துரைத்த டாக்டர் நுங்சாரி, மடானி பொருளாதாரத்தை அமைப்பதற்கு மலேசிய புள்ளிவிவர இலாகா பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லப்படுவது பற்றி என்னால் கருத்துரைக்க முடியாது. ஆனால், மடானி பொருளாதாரமும் புதிய பொருளாதார கொள்கையும் (எம்.இ.பி.) ஒன்று என சொல்லப்படுவதை மறுக்கின்றோம். எம்.இ.பி, குறிப்பாக நாகரீகம் மற்றும் சமூகத்தின் அம்சங்கள் அடிப்படையிலானவை அல்ல. அது முறையாக அமல்படுத்தப்படவும் இல்லை. நஜீப் அமல்படுத்தியது பொருளாதார மறுஉருவாக்கத் திட்டங்களே அன்றி எம்.இ.பி. கிடையாது. நாட்டின் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கின்றது என்பதைத்தான் மலேசியர்கள் வழக்கமாக கேட்டு வருகின்றனர். எனினும், தங்கள் தினசரி வாழ்க்கையில் சவால்களை எதிர்நோக்கும் மக்களால் இதன் நன்மைகளை உணர முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

முரண்பாடு ஏன்?

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் இடையே முரண்பாடு இருப்பது ஏன்? மக்களுக்கு சமமான நன்மைகளைத் தர முடியாத வளர்ச்சியினால் என்ன பயன் என்று பிரதமரே கேட்டிருக்கிறார். அது மந்தமடைகின்றது. சமமாகவும் விநியோகிக்கப்படுவது இல்லை. நான் இங்கு விளக்கியுள்ள மடானி பொருளாதாரத்தின் அம்சங்களும் இவைதாம். முதலில், குறைந்த மூலதனம்/தொழில்நுட்பம்/ பரவலான நிலம்/மிகப்பெரிய மனித ஆற்றல் ஆகிய காலனித்துவ அம்சங்களை உள்ளடக்கிய தோட்ட தொழில்துறை, மூலப்பொருள் தொழில்துறை போன்ற நடவடிக்கைகளில் நாட்டின் பொருளாதாரம் இன்னும் சிக்கிக்கொண்டுள்ளது.  சம்பளம் என்ற ரூபத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருமானத்தின் அளவை குறைக்கின்றது. பல்வேறு தயாரிப்புத் துறைகள், கட்டுமான துறைகளிலும் சம்பளம் குறைவாகவே உள்ளது. இது மட்டுமின்றி, குறைவான ஆற்றல் பெற்ற அந்நியத் தொழிலாளர்கள் அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களும் சம்பளத்தையே வலியுறுத்துகின்றனர்.

மலேசியாவில் சுற்றுலாவைத் தவிர்த்து, சேவைத்துறை பெரும்பாலும் உள்நாட்டு தேவைகளையே சார்ந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் வருமான அளவும் அதிகம் இல்லை, கொள்முதல் சக்தியும் அதிகம் இல்லை. ஆகவே, இந்த கட்டமைப்பை முதலில் நாம் மாற்ற வேண்டும், நாட்டின் போட்டா போட்டி தன்மையை சரிசெய்ய வேண்டும், அனைத்துலகச் சந்தையில் மலேசிய நிறுவனங்களின் இருப்பை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு வாணிபத்தை அதிகரிக்க வேண்டும். இவைதாம் மக்களுக்கு நன்மை அளிக்கும், நாட்டைச் செழிப்பாக்கும் என அவர் விவரித்தார்.

மக்களை எதிர்நோக்கியிருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்சினை அதிகரித்து வரும் உணவுகளின் விலைகள். அரசாங்கம் மாறியதும் பணவீக்கம் குறைந்தது என மடானி அரசாங்கம் அவ்வப்போது அறிவித்து வந்தாலும், பணவீக்கம் இருக்கும் வரை உணவுகள் மற்றும் அடிப்படை பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. மக்களுக்காக வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பாற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
ரஷ்ய - உக்ரைன் போரும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாகும். எனவே, நாட்டின் எதிர்காலத்தில் சந்தைக்கு நம்பிக்கை வரும் அளவிற்கு பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என டாக்டர் நுங்சாரி ஆலோசனை கூறுகிறார்.

வேலையும் சம்பளமும் மக்களுக்கு முக்கியம். வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அர்த்தமுள்ள வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரத்தை அரசாங்கம் நிர்வகிப்பது அவசியம். கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் மதிப்பும் குறைந்துள்ளது. வெளிநாட்டு உணவுகளை மலேசியா அதிகம் நம்பியிருப்பதால் இதுவும் உணவுகளின் விலையேற்றத்திற்கு காரணமாகின்றது. ஆகவே, வெளிநாட்டுச் சந்தைகளில் ஏற்ற்மதி செய்ய முடிகிற ஒரு போட்டா போட்டித்தன்மை நிறைந்த நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும். கட்டமைப்பு ரீதியாக இதனை உயர்த்துவதே இதற்குள்ள ஒரே வழி.

அனைத்துலக வர்த்தகத்தின் மேம்பாடு, ரிங்கிட்டிற்கான மதிப்பை உயர்த்தி அதனை மேலும் வலுப்படுத்தும். இதுதான் மடானி பொருளாதாரம். ஒரு போட்டா போட்டித்தன்மை உடைய நிறுவனம் நம் வசம் இருக்கும்போது பங்குச்சந்தையும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். இதனால் முதலீடுகளையும் பணப் புழக்கத்தையும் அதிகரிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img