img
img

மலேசிய இந்தியர்களுக்கான ஒதுக்கீடு மேலும் சரிந்தது
சனி 08 அக்டோபர் 2022 15:44:07

img

“ஒரே மலேசியா என்ற சுலோகத்தின் கீழ் நஜீப் இந்தியர்களுக்கு அள்ளிக்கொடுத்தார். ஆனால், மலேசிய குடும்பம் என்ற சுலோகத்தின் கீழ் இஸ்மாயில் சப்ரி இந்தியர்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறார்” - என சமூகப் பார்வையாளர்கள்

கோலாலம்பூர், அக். 8-

பொதுத்தேர்தலுக்கான இனிப்புகள் மட்டுமே அடங்கிய ஒரு வரவு செலவுத் திட்டத்தை தேசியக் கூட்டணி அரசாங்கம் நேற்று அறிவித்த வேளையில், மலேசிய இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகள் முன்பை விட மேலும் குறைக்கப்பட்டிருப்பது அவர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்தெறிந்து வெறும் ஏமாற்றத்தையே அளித்தது. 2023 வரவு செலவுத் திட்டத்தில் மொத்த ஒதுக்கீடு 37,230 கோடி வெள்ளியாகும்.

மலேசிய இந்தியர்களின் உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் வழக்கம் போல 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெக்குன் திட்டத்தின் கீழ் மலேசிய இந்திய தொழில் முனைவர் திட்டத்திற்கு (ஸ்பூமி) இம்முறை வெறும் 2 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. 2022 இல் மித்ராவுக்கு அதே 10 கோடி வெள்ளி வழங்கப்பட்டாலும், இந்திய தொழில் முனைவர்களுக்காக 4 கோடியே 50 லட்சம் வெள்ளியுடன் மொத்தமாக 14 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனினும், நேற்று அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கு ஒட்டுமொத்தமாக கிடைத்திருப்பது 12 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே. முந்தைய ஆண்டை விட இது 2 கோடி வெள்ளி குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கென தனி ஒதுக்கீடு எதுவும் இந்த முறையும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக கல்வி அமைச்சுக்கு மொத்தமாக 5,560 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் உகந்த கற்றல், கற்பித்தல் சூழலை உருவாக்குவதற்காக 230 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாண்டு இதே நோக்கத்திற்காக வழங்கப்பட்ட 170 கோடி வெள்ளியிலிருந்து மிகப்பெரிய அதிகரிப்பாகும். தமிழ், சீன மற்றும் தேசியப் பள்ளிகளுக்கான தேவைகள் இதில் உள்ளடங்கும். குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை என்பது அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், பள்ளிக்கூடம் பழுது பார்த்தல், பராமரிப்புப் பணிகளுக்கான 110 கோடி வெள்ளியும் இதில் அடங்கும் என நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

சிலாங்கூர், சபா,சரவா, திரெங்கானு, சைபர்ஜெயாவில் 5 புதிய பள்ளிக்கூடங்களை நிர்மாணிப்பதற்கு 43 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனிடையே, மலேசிய இந்தியர்களுக்கு தனிச்சலுகை என்பது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணி ஆட்சி காலத்தோடு முடிந்து விட்டிருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது என சமூகப் பார்வையாளர்கள் இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துக் கூறியுள்ளனர்.

ஒரே மலேசியா என்ற சுலோகத்தின் கீழ் நஜீப் இந்தியர்களுக்கு அள்ளிக்கொடுத்தார். ஆனால், மலேசியக் குடும்பம் என்ற சுலோகத்தின் கீழ் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்தியர்களுக்கு கிள்ளிக்கொடுக்கிறார் என அவர்கள் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறைந்த வருமானம் பெறும் ஏழை இந்தியர்களுக்கு இந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு உதவப்போகின்றன. வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் அவர்களின் நிலையை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்த்திருப்பதாக தெரியவில்லை என அவர்கள் மேலும் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img