கோலாலம்பூர், ஜன. 21-
கோவிட்-19 தொற்றுப் பரவல் அண்மைய வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் பதிவான புதிய பாதிப்புகளில் 90.8 விழுக்காடு கல்விக் கழகங்கள் சம்பந்தப்பட்டவை என்று சுகாதார அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
நேற்று முன்தினம் மட்டும் 3,229 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. 457 திரள்கள் அவற்றில் அடங்கும். அத்திரள்களில் 415 அல்லது 90.8 விழுக்காட்டுச் சம்பவங்கள் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்விக் கழகங்களில் நிகழ்ந்தவை. எஞ்சிய 40 அல்லது 8.8 விழுக்காட்டுச் சம்பவங்கள் வேலை இடங்களில் நிகழ்ந்தவை.
இந்நிலையில், நெகிரி செம்பிலானில் கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட இரு பள்ளிகள் நேற்று மூடப்பட்டன. சிரம்பானில் உள்ள துங்கு முனாவிர் அறிவியல் இடைநிலைப் பள்ளி, நீலாயில் உள்ள நீலாய் சமயப் பள்ளி ஆகியன அவ்விரு பள்ளிகளாகும் என மாநில சுகாதார, சுற்றுச்சூழல், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினரான எஸ்.வீரப்பன் கூறினார்.
துங்கு முனாவிர் இடைநிலைப் பள்ளியில் ஜனவரி 17 ஆம் தேதி 227 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 56 பேருக்கு தொற்று உறுதியான அதே சமயம், மற்ற 171 பேருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிய வந்ததாக அவர் சொன்னார். தொற்று உறுதியான அனைவரும் சிகிச்சைக்காக தம்பினில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நீலாய் சமயப் பள்ளியில் 13 கோவிட்-19 தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டது. இங்கு மொத்தம் 57 பேர் மீது இத்தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு தொற்றுப் பரவல் கண்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அப்பள்ளியை 7 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக ஆஸ்ட்ரோ அவானி தகவல் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பள்ளியின் முதல்வர் இத்தகவலை தெரிவித்திருப்பதாக அது குறிப்பிட்டது.
ஆறாம் படிவ மூன்றாம் தவணை மாணவர்களை தவிர்த்து மற்ற எல்லா மாணவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கள் தொடங்கி வரும் 23 ஆம் தேதி வரையில் அப்பள்ளி மூடப்பட்டிருக்கும். லெம்பா பந்தாய் மாவட்ட சுகாதார இலாகா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. முதலாம் படிவம் முதல் ஆறாம் படிவம் (முதல் தவணை) வரைக்குமான மாணவர்கள் இன்று வரை இயங்கலை வாயிலாக கற்றல் கற்பித்தலை மேற்கொள்வார்கள்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்