img
img

நம் பண்பாட்டு அடையாளத்தின் கருவறை ஆலயங்களே.
திங்கள் 31 ஜூலை 2017 12:42:00

img

(கே.வி. இளவரசி - எஸ்.டவினா - கி.தீபன்) கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவை சரியான வகையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் தேசிய ஆலய மாநாடு நேற்று பங்சாரில் உள்ள சுகாதார நிர்வாக கல்விமையத்தில் மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. ஆலயம் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி அமைக் கப்படும் ஆலயங்களில்தான் நம்மால் முழு பயனையும் பெற முடியும். ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் சில தரப்பினர் ஆலயங் களைத் தனிநபர் இஷ்டம் அல்லது பயனை மட்டுமே கருத்தில் கொண்டு எழுப்புகின்றனர். இத்தகைய ஓர் அலட்சிய போக்கு வருங் காலத்தில் நம் முடைய பண் பாட்டில் எதிர் பாரா மாற்றங் களை ஏற்படுத் தக் கூடிய வாய்ப்புள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டே ஆலயம் குறித்த தகவல்கள், ஆகம விதிகள், சமுதாய முன்னேற்றத்தில் ஆலயத்தின் பங்களிப்பு தொடர் பான விஷ யங்கள் அடங்கிய தேசிய ஆலய வழிகாட்டி நூல் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழும் ஆலயங்கள் தொடர்பான விவகாரங்களுக்கு இரு தரப்பினர்களிடையே நட்பு முறையிலேயே தீர்வு காணப் பட வேண்டும் எனவும் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து தேசிய ஆலய வழிகாட்டியை வெளியிட்ட மஇகா தேசிய தலைவரும் சுகா தாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். சமயம் சார்ந்த பிரமுகர்களோடு நாட்டில் உள்ள பல ஆலயங்களின் பிரதிநிதிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். ஆலயங்களே முதல் பாடசாலைகளாக மாற வேண்டும் பள்ளிகளில் சமயக் கல்வி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்பது நாம் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் வைத்துக்கொண்டு வரும் கோரிக்கை யாகும்.அந்தப் பணி இன்றும் தொடர்ந்து வருகிறது என மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷாண் தெரிவித்தார். இருப்பினும், பள்ளிகளில் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பெற்றோர்கள் முதலில் தங்களின் கடமையைச் செய்ய வேண்டும். ஆலயங்களில் சமய வகுப்புகள் நடத்தி னால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தயங்காமல் அனுப்ப வேண்டும். சமூக வளர்ச் சிக்கு முக்கிய அஸ்தி வாரமே பெற்றோரி டையே ஏற்படும் சிந்தனை மாற்றம்தான். அதே வேளையில், ஆலயங்களும் வழிபாட்டு நடவடிக்கை களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமூக வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஆல யங்களின் பணிகளில் இளைஞர்கள் இளம் வயதிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இருக்கின்ற ஆலயங்களே போதுமானது தற்போது இந்த நாட்டில் நம் மக்கள் தொகையைக் காட்டிலும் ஆலயங்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக உள்ளது. எனவே, இன்னும் அதிகமான ஆலயங்களைக் கட்ட முனையாமல் இருக்கின்ற ஆலயங்களைச் சரியான முறையில் பாதுகாத்து வந்தாலேயே நம்முடைய சமுதாயத்தின் கலாச்சாரம் இன்னும் நெடுநாளைக்குக் கட்டிக்காக்கப்பட்டு வரும் என சிவஸ்ரீ அ.ப. முத்துக்குமார சிவாச் சாரியார் ஆலய நிர்வாகத்தினரையும் பொதுமக்களையும் வலியுறுத்தினார். மாநாட்டில் ஆலயங்களே இந்து கலாச்சாரத்தின் அடையாளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆலயம் அமைப்பதற்கு என்றே ஆகம விதிகளை அமைத்துக்கொண்ட பண்பாடு நம்மிடம் உள்ளது. ஆலயத்தின் கருவறையும் இன்னும் பிற சந்நிதிகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற விதிகள் எல்லாம் உள்ளன. ஆனால், நாட்டில் உள்ள ஆலயங்களில் பெரும்பான்மையானவை இவற்றைப் பின்பற்றிதான் கட்டப் பட்டுள்ளனவா என்றால் கேள்விக்குறிதான். எனவே, இருக்கின்ற ஆலயங்களைப் பாதுகாத்து வழிபாடு செம்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்தாலேயே நம்முடைய பண்பாட்டின் அடையாளமும் கட்டிக்காக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆலய வழிபாடே நம் பாரம்பரியத்தின் வேர் இன்றைய தலைமுறையினரிடையே யோகா, தியான மையங்கள் போன்றவை அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையி லேயே ஆலய வழிபாட்டில் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. இருப்பினும், ஆலய வழிபாடுதான் அனைத்து விதமான வழிபாடுகளின் பாரம்பரிய வேர் என்பதை இன்றைய தலைமுறையினர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆலய வழிபாடு இன்றைய காலத்திற்குத் தேவையா என்ற தலைப்பில் உரையாற்றிய தவத்திரு சுவாமி பிரமானந்தர் சரஸ்வதி குறிப்பிட்டார். ஒரு காலக் கட்டம் வரையில் ஆலயத்தின் அல்லது இறைவனின் மீது இருந்து வந்த நம்பிக்கை மெல்ல மெல்ல தேய்ந்து களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தியதன் விளைவே, அவர்களின் கவனம் மேலே குறிப்பிட்ட யோகா, தியானம் போன்றவை சார்ந்த மையங்களின் மீது திசை திருப்பப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் தவறு இல்லையென்றாலும் நம்மையும் நம் பண்பாட்டையும் அடையாளப்படுத்துவதே ஆலய வழிபாடுதான் என அவர் மேலும் குறிப்பிட்டார். பொது இயக்கங்களோடு இணைந்து பணியாற்றுவது காலத்தின் தேவை ஆலயங்கள் சுற்றியுள்ள பொது இயக் கங்களோடு இணைந்து பணியாற்றினால் நம் சமூக வளர்ச்சியை இன்னொரு பரிணா மத்திற்குக் கொண்டு செல்ல முடியும். பக்தி தலத்தோடு ஆலயம் சமுதாய ஸ்தலமாக உருமாற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என ஆலய மேம்பாட்டில் பொது சேவை இயக்கங்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றிய தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இவ்வாறு பொது இயக்கங்களோடு இணைந்து பணியாற்றும் சேவை அங்குள்ள இளைஞர்களின் சேவை உணர்விற்கு வடிகாலாகவும் அமையும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார். இளைஞர்களை மீட்க சேவையே இறைவழிபாடாக வேண்டும் இன்று திசை மாறிச் சென்றுள்ள நம் இளைஞர்களை மீண்டும் நமது பண் பாட்டிற்கே மீட்டுக்கொண்டு வர வேண்டு மென்றால் இளைஞர்களுக்குச் சேவை இறைவழிபாடு என்பதை உணர்த்த வேண்டும் என சேவையே இறைவழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றிய சக்திபிரியானந்தர் விளக்கினார். இளைஞர்களிடையே அராஜகம் எந்தளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதை டி.நவீன் விவகாரம் மூலமாக நம்மால் உணர முடிகிறது. இத்தகைய இளைஞர் களை மீட்க வேண்டும் என்றால் அவர்களை இறைசேவையில் ஈடுபடுத்துவதே தீர்வு எனவும் அவர் குறிப்பிட்டார். ஆலயங்கள் சமய அறிவின் வளர்ச்சிக்கு இடமளிக்கக் கூடிய களமாக இருக்க வேண்டும். ஆலயங்கள் அனைத்தும் சமய வளர்ச்சியைப் பெரிய அளவில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆலயங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கூட இயன்ற வரையில் அந்தப் பணியைச் செய்யலாம் என சமுதாய மேம்பாட்டில் ஆலயங்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றிய மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டத்தோ அ.வைத்திலிங்கம் குறிப்பிட்டார். மேலும், சமய வளர்ச்சியில் மலேசியாவில் உள்ள தமிழ் நாளிதழ்கள் தங்களின் பங்கை ஆற்றி வருகின்றன. அந்தப் பணிக்கு மக்களிடம் எந்தளவிற்கு வர வேற்பு உள்ளது என்பது கேள்விக்குறியே. அதே வேளையில், முன்பு ஆலயங்களில் அர்ச்சனைக்கு முன் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. இன்று காணாமல் போய்விட்ட அந்த அங்கம் மீண்டும் ஆலயங்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஆலயங்களுக்கும் மக்களுக்கும் இடையே அன்பு வளர்ச்சி வலிமையாக இருந்தாலேயே தவிர சமுதாய வளர்ச்சியை ஆலயங்களால் முன்னெடுக்க இயலாது எனவும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img