img
img

காலியாகின்றன மஇகாவின் 4 செனட்டர் பதவிகள்.
சனி 08 ஜூலை 2017 13:15:38

img

கோலாலம்பூர், மஇகாவிடம் உள்ள 6 செனட்டர் பதவிகளில் மூவரின் பதவிகள் விரைவில் காலியாகவிருக்கின்றன. ஒரு பதவி கடந்த மாதத்துடன் காலியாகி விட்டது. இந்நிலையில் அந்த 4 செனட்டர் பதவிகளும் உடனடியாக நிரப்பப்படுமா? அல்லது வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிரப்பப்படுமா? என்ற கேள்வி மஇகா வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ளது. பெட்டாலிங் ஜெயா செலாத்தான் மஇகா தொகுதித் தலைவராக இருந்த வி. சுப்பிரமணியம் என்ற பாராட் மணியம் (வயது 63), அதேதொகுதியில் மஇகா தலைவியாக இருந்த ஏ. சிவபாக்கியம் பெருமாள் ( வயது 58) மற்றும் மஇகா உதவித் தலைவரும் கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவருமான டத்தோ ஜஸ்பால் சிங் (வயது 55) ஆகியோர் வகித்து வரும் மேலவை உறுப்பினருக்கான செனட்டர் பதவி காலியாகவிருக்கிறது. பகாங் மாநில மஇகா தலைவர் டத்தோ இரா. குணசேகரன் வகித்து வந்த ஒரு தவணைக்கான செனட்டர் பதவி காலம் கடந்த ஜூன் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.இதில் இரண்டு தவணைக் காலம் செனட்டர் பதவியை வகித்து வரும் பாராட் மணியம் மற்றும் சிவபாக்கியத்தின் பதவி காலம் வரும் 25-8-2017 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர்கள் இருவரும் அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலின் வலுவான சிபாரிசின் பேரில் ஏக காலத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக செனட்டர் பதவியை ஏற்றனர். அதன்பின்னர் மறுபடியும் அவ்விருவ ருக்கும் 25-8-2014 ஆம் தேதி இரண்டாவது தவணையாக செனட்டர் பதவியை வழங்கினார் டத்தோஸ்ரீ பழனி. இது மஇகா வட்டாரத்தில் மிகுந்த புகைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மஇகா சார்பாக செனட்டராக பதவி ஏற்பவர்கள், ஒரு தவணைக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று பழனி தலைமையில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவையில் 2011 ஆம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது. எனினும் ஒரே தொகுதியைச் சேர்ந்த பாராட் மணியத்திற்கும் சிவபாக்கியத்திற்கும் மறுபடியும் இரண்டாம் தவணையாக பதவி வழங்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்த பலர் குறிப்பாக அந்தப்பதவிக்கு குறிவைத்தவர்கள் பழனி மீது சீறிப்பாய்ந்தனர். ஒரு தவணைக் காலம் என்பது செனட்டராக பணியாற்றக்கூடியவர்களுக்கு போதுமான சேவைக்காலமாக இருக்க முடியாது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்தான் அவர்கள் இருவரும் இரண்டாம் தவணையாக பதவியை தொடரும்படி கேட்டுக்கொண்டார் என்று மஇகா தலைவர்களை வாயடைக்கப் பார்த்தார். எனினும் இந்த செனட்டர் நியமன விவகாரம் உச்சமாக வெடித்து பழனி மீது நம்பிக்கை இழக்கும் அளவிற்கு தலைவர்களிடையே பெரும் போக்களமாகியது. டத்தோ ஜஸ்பால் சிங்கின் இரண்டாம் தவணைக்கான செனட்டர் பதவி காலம் வரும் 1-11-2017 ஆம் தேதி முடிவடைகிறது. அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக செனட்டர் பதவியை ஏற்றார். பின்னர் 2-11-2014 இல் இரண்டாவது முறையாக செனட்டர் பதவி வழங்கப்பட்டது. ஒரு தவ ணைக்கு மேல் செனட்டர் பதவியை யாரும் வகிக்கக்கூடாது என்று மஇகாவின் மத்திய செயலவையின் முடிவு இன்னமும் அமலில் இருப்பதால் இந்த மூவருக்கும் மறுபடியும் செனட்டர் பதவியை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகிறார். மஇகாவின் மேலும் மூன்று செனட்டர் பதவிகளில் ஒன்று தற்போது இரண்டாவது தவணையாக மேலவைத் தலைவர் பதவியை வகிக்கும் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பகாங் குணசேகரன் செனட்டர் பதவி காலியாக கிடக்கிறது. இன்னொரு செனட்டர் பத வியானது, தற்போது பிரதமர் துறை துணை அமைச்சராக இருக்கும் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி வகித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. எனினும் தேவமணி வகித்து வரும் செனட்டர் பதவி, யாருடையது என்பது இன்னமும் தெளிவான நிலை இல்லை என்கின்றனர் கட்சியின் முன்னணி தலைவர் ஒருவர். காரணம், கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்விகண்ட தேவ மணி, கடந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற மஇகா தேர்தலில் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு ஒரு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் நெருக்குதலின் காரணமாக அவருக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டு, துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட செனட்டர் பதவி கோட்டாவானது பேரா மாநிலத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் பேராவில் தங்சோங் மாலிம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பெஹ்ராங் சட்டமன்றத் தொகுதி மற்றும் சித்தியவான், பாசிர் பாஞ்சாங் சட்டமன்றத் தொகுதியை அம்னோவிற்கு விட்டுக்கொடுத்ததன் காரணமாக ஏற்கெனவே தேசிய முன்னணி உறுதி அளித்ததைப் போல் ஒரு செனட்டர் பதவியை மஇகாவிற்கு தந்துள்ளது. அதனைதான் தேவமணி வகிக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த கூற்று உண்மையானால் மஇகாவின் வசம் மேலும் கூடுதலாக ஒரு செனட்டர் பதவி உள்ளன. பாராட் மணியம், சிவபாக்கியம், ஜஸ்பால் சிங், குணசேகரன் ஆகியோரின் பதவிகளுடன் சேர்த்தால் மஇகாவிற்கு 5 செனட்டர் பதவிகள் சுளையாக உள்ளன. அப்படி தேவமணி வகிக்கும் செனட்டர் பதவி மஇகாவிற்கு உடையது என்றால் இன்னும் 4 பதவிகள் உள்ளன. பழனி காலத்தில் நிறைய பேருக்கு செனட்டர் பதவிக்கு ஆசைகாட்டி அவர்கள் கடைசியில் அம்போவென்று கைவிடப்பட்டனர் என்பது ஒரு கருப்பு வர லாறாகும். அதேபோன்று இந்த ஐந்து செனட்டர் பதவிக்கும் நிறைய பேருக்கு ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழனியைப் போல் இந்த விவகாரத்தை கையாளுவதில் டாக்டர் சுப்பிரமணியம் தடுமாற்றத்தை கொண்டு இருப்பாரா? அல்லது சாமர்த்தியாக முடிவு எடுப்பாரா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும் என்று மஇகாவின் முக்கியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img