img
img

தூங்கி வழியும் மக்கள் பிரதிநிதியை தூக்கில் ஏற்றுவோம்.
வியாழன் 22 ஜூன் 2017 14:48:58

img

ம.யோகலிங்கம் காப்பார், கடந்த காலங்களில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி மக்களை கவனிக்காமல், அலட்சியமாக நடந்து கொண்டதன் காரணமாகவே பெயர், முகம் தெரியாத பி.கே.ஆர். கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலைக்கு காப்பார் தொகுதி இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று பலர் தங்கள் வேதனையை தெரிவித்தனர். இருந்தவனும் சரியில்லை, வந்தவனும் சரியில்லை என்ற இரண்டாங்கட்ட நிலையில் தாங்கள் இருந்ததாக பலர் ஒப்புக்கொண்டனர். 1979 ஆம் ஆண்டு காப்பார் சட்டமன்றத்தை உள்ளடக்கியிருந்த கோலக்கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்திற்கு பிறகு வந்த மஇகா நாடாளுமன்ற வேட்பாளர்களில் ஒருவர்கூட சரியில்லை என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது என்கிறார் பெரியவர் மு. வீரமலை. * 1979 : டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் திடீர் மறைவுக்கு பிறகு 1979 டிசம்பரில் நடந்த கோலக்கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கோலாலம்பூரை சேர்ந்த டத்தோ வீ. கோவிந்தராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். * 1982 : அடுத்த 1982 இல் நடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மறுபடியும் மக்கள் அவரையே தேர்வு செய்தனர். அந்த காலக்கட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் டத்தோ வீ.கோவிந் தராஜ் காப்பார் பக்கமே தலைகாட்டவில்லை. * 1986 : காப்பார் தொகுதிக்கு நன்கு படித்தவர், சமுதாய உணர்வை அறிந்தவர், வழக்கறிஞர் என்று டத்தோஸ்ரீ சாமிவேலு அறிவித்து, மஇகா சார்பில் கோலாலம்பூரை சேர்ந்த டி.பி. விஜேந்திரன் நிறுத்தப்பட்டார். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டி.பி.விஜேந்திரன், காப்பார் தொகுதியில் கவனம் செலுத்தாமல் தனது உதவியாளர் பார்த்திபனுடன் மைக்கா ஹோல்டிங்ஸிற்கு பணம் வசூலிப்பதில் தான் தீவிர கவனம் செலுத் தினார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் பொறுப்பேற்றப்பின்னர் ஆபாச வீடியோ படத்தில் நடித்ததாக போலீஸ் புகாருக்கு ஆளாகிய பின்னர் அவரும் காப்பார் பக்கமே தலைகாட்டவில்லை. * 1990: காப்பார் நாடாளுமன்றத்திற்கு பழம் பெரும் அரசியல்வாதியை நிறுத்துவாக கூறி, கோலசிலாங்கூர் ஸ்ரீ சகாயா சட்டமன்ற உறுப்பினரும் கோலாலம்பூரை சேர்ந்தவருமான டத்தோ மகாலிங்கத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு அறிமுகப்படுத்தினார். வெற்றியும் பெற்றார். காப்பார் மஇகா தொகுதியின் தலைவராக வரவேண்டும் என்ற சர்ச்சையில் சிக்கிய அவர், அதே காலக்கட்டத்தில் சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகவும் நியமிக்கப்பட்டதால் காப்பாரை விட அவர் கோலாலம்பூரில் அதிக நேரம் செலவிட்டார். * 1995: காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஓர் இரும்புப்பெண்மணியை அறிமுகப்படுத்துவதாக கூறி, 1995 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கோலாலம்பூரை சேர்ந்த டாக்டர் லீலா ராமாவை டத்தோஸ்ரீ சாமிவேலு அறிமுகப்படுத்தினார். காப்பாரில் இலவச மருத்துவச் சேவை வழங்கப்போவதாக பெரிய அறிவிப்புடன் களம் கண்டு வெற்றி பெற்ற டாக்டர் லீலா ராமாவின் தொகுதி மக்கள் சேவையும் ஒரு பிடிமானம் இல்லாமல் போனது. *1999: காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா மகளிர் தலைவியும் கோலாலம்பூரை சேர்ந்தவருமான டத்தின் படுக்கா கோமளா கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டார்.தொகுதி மக்களுடன் அந்நியப்பட்டவராகவே அவர் காணப்பட்டாலும் அவரின் உதவியாளர் நடராஜா போன்றவர்களின் ஒத்துழைப்பினால் ஓரளவு தாக்குப்பிடித்தார். *2004: காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு மறுபடியும் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக கோமளா கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். தேர்தல் முடிந்தவுடன அமைக்கப்பட்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியுடன் காப்பார் தொகுதிக்கு முடிந்தால் வருவேன் என்ற கூக்குரலுடன் அவர் புத்ராஜெயாவிலேயே ஐக்கியமானார். இப்படி ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட இந்தியர்கள், தங்கள் சேவையை முழு மையாக வழங்க முடியாமல் தொகுதி மக்களுக்கு அல்வா கொடுத்த காரணத்தினாலேயே மஇகா மற்றும் தேசிய முன்னணி மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாக காப்பார், ஜாலான் ஆக்கோப் தோட்டத்தின் முன்னாள் காரியதரிசியான சின்னையா என்ற வீரமலை கூறுகிறார். மஇகா மீது கொண்ட வெறுப்பினாலேயே மஇகாவிற்கு எதிர்ப்பாக நிற்கும் வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில் மனவலிமையுடன் காப்பார் இந்தியர்கள் இருந்ததால்தான் கடந்த 2008 பொதுத் தேர்தலில் அறிமுகமே இல்லாத பி.கே.ஆர். வேட்பாளர் எஸ். மாணிக்கவாசகத்தையும் அதன் பின்னர் கடந்த 2013 பொதுத் தேர்தலில் பி.கே.ஆர். வேட்பாளர் ஜி. மணிவண்ணனையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிலைக்கு காப்பார் மக்கள் வந்தனர். மஇகா காப்பாரை சேர்ந்த ஒரு வேட்பாளரை நிறுத்தாமல் ஒவ்வொரு முறையும் காப்பாருக்கு வெளியே கோலாலம்பூரை சேர்ந்தவர்களை, தேர்தலில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட கடும் வெறுப்பே கண்களை பொத்திக்கொண்டவர்கள் எல்லாம், கண் திறக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களானார்கள் என்கிறார் வீரமைலை.கடந்த காலங்களில் மஇகா செய்த பெரும் தவற்றினாலேயே தற்போது பி.கே.ஆர். கட்சி ஆதிக்கதில் மணிவண்ணன் போன்ற சேவை மனப்பான்மை இல்லாத நபர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதியை பிரதிநிதிக்க வேண்டியதாயிற்று. காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் தொகுதி மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினையை விட தேசிய விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவது எந்த வகையில் காப்பார் மக்களுக்கு பேருதவியாக இருக்க முடியும் என்று வினவுகிறார் பெரியவர் குணசீலன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பேசுவது தவறில்லை. தொகுதியை கவனிக்காமலேயே பேசிக்கொண்டு இருப்பதால் தொகுதி மக்களுக்கு என்ன லாபம் என்கிறார் அந்த பழம் பெரும் அரசியல்வாதி. காப்பாரில் உள்ள கல்லூரி ஒன்று செடிக் பயிற்சி திட்டத்தில் இந்திய மாணவிகள் சிலரை ஏமாற்றியதாக சம்பந்தப்பட்ட மாணவிகளும் பெற்றோர்களும் போலீஸ் புகார் கொடுத்த வண்ணம் இருந்துள்ளனர். ஆனால், தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்த விவகாரத்தை 20 நாட்கள் கடந்தப் பின்னரே மணிவண்ணன் முன்னெடுக்க வந்துள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமை என்பது இயற்கை சீற்றத்தில் வீட்டின் ஒரு ஓடு பறந்து சென்றாலும்கூட பாதிக்கப்படும் மக்களை பார்க்க ஓடோடி வந்து, இயற்கை சீற்ற நிதியிலிருந்து அந்த வீட்டை பழுதுப்பார்த்துக் கொடுக்க வேண்டும். இந்த எளிய தத்துவத்தைக்கூட உணராத மணிவண்ணன் போன்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது விந்தையிலும் விந்தை என்கிறார் புரவி பெரியசாமி. தொழிற்சங்கவாதியும் கோல்கொண்டா தோட்ட முன்னாள் ஊழியருமான ஆராயி கூறுகையில் காப்பாரில் ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். இவர்களை சமூக நல இலாகாவிற்கு அழைத்து சென்று பதிவு செய்து உதவுவதற்கு இங்கு ஆள் இல்லை. வாக்காளர்கள் பதிவில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு உதவுவதில் காட்ட மறுக்கின்றனர். ஏற்ககெனவே சமூக நல இலாகாவில் உதவிப்பெற்று வந்த குடும்பங்களின் சிலரின் மாதாந்திர உதவியும் மறுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கவனிக்க தற்போது ஆள் இல்லை என்கிறார் ஆராயி விரக்தி கலந்த குரலுடன். காப்பார் நாடாளுமன்றத்தின் கீழ் செலாட் கிள்ளான், செமந்தா, மேரு, சுங்கைப் பினாங் ஆகிய நான்கு சட்டமன்றங்கள் உள்ளன. இதில் கிள்ளான் நக ராண்மைக்கழகத்தில் மேரு தொகுதிக்கு பாஸ் சார்பாக கே. தீபாகரனும் செமந்தா தொகுதிக்கு பி.கே.ஆர். சார்பாக வே. மணிவண்ணனும் இருக்கின்றனர். ஒரே நாடாளுமன்றத்தில் வெவ்வொறு சட்டமன்றத் தொகுதியை இவர்கள் பிரநிதித்தாலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிக்கிறார்களா? இவர்கள் நாற்காலியை சூடேற்றிக்கொண்டு இருக்கும் கிள்ளான் நகராண்மைக்கழகத்திற்கு மக்களின் பிரச்சினையை கொண்டு செல்கிறார்களா? என்றுமக்களை கேட்டால், கெட்ட கோபம் வரும் என்கின்றனர் உள்ளூர் மக்கள். அந்த அளவிற்கு இந்த இரு நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மீதும் மக்கள் வெறுப்பாக உள்ளனர். கலைநிகழ்ச்சி நடத்துவதிலும் பத்திரிகை அறிக்கைகளை விடுவதிலும்தான் இவர்கள் மன்னர்களாக இருக்கின்றனர் என்று மக்கள் அலுத்துக்கொள்கின்றனர். 1979 முதல் 2017 வரையில் உள்ள காப்பார் நாடாளுன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோலாலம்பூரிலிருந்து இறக்கப்பட்ட வான்குடை வேட்பாளர்கள். எனவேதான் தொகுதி மக்களின் உணர்வுகளையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் புறக்கணித்து வந்துள்ளனர். மறைந்த மாணிக்கவாசகத்திற்கு பிறகு காப்பார் மக்களின் உரிமைக்கு போராடினேன் என்று எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் துணிந்து கூற முடியுமா? என்று வினவுகின்றனர் மக்கள். வருகின்ற பொதுத் தேர்தலில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய உள்ளுர் வேட்பாளர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணத்தில் காப்பார் மக்கள் உள்ளனர். சேவையாளர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொகுதி இந்தியர்கள் தெளிவாக இருப்பார்களேயானால் அவர்கள் நெருப்பிலிருந்து தப்பி, மலர்வனத்திற்குள் விழ முடியும் என்பதே காப்பார் நாடாளுமன்றத் தொகுதி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் எங்களின் சக்திமிக்க வாக்கை கொண்டு சரியான பாடத்தை கற்பிப்போம் என்று மக்கள் உறுதி கூறியது அவர்களின் நெஞ்சுரத்தை காட்டியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img