img
img

மாணவர்களிடையே குண்டர்தனம்!
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 08:46:43

img

இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குண்டர் தனம், கடந்த வியாழக்கிழமை இங்குள்ள ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப்பள்ளி வெளி வளாகத்தில் நடந்த சம்பவம் மலேசிய மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 45 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ கிளிப் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே காணப்படும் இந்த குண்டர் தனம் உச்ச சாபமா? அல்லது திணிப்பா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. * மாணவர்களின் குண்டரிய நடவடிக்கைகளுக்கு யார் காரணம்? * சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகளின் எதிரொலியா? * இந்திய சமூகத்தின் தலையாய சீர்கேட்டிற்குத் தீர்வினைக் காணாதது ஏன்? * இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவாதமா? கடந்த வியாழக்கிழமை சமூக ஊடகங்களின் வழி தீயாகப் பரவிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆரவாரத்தோடு குண்டர் கும்பலின் பிறந்த தினத் திற்காக கிள்ளானில் சில இடைநிலைப்பள்ளிகளின் முன்னால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ பதிவுகள் மலேசிய இந்தியர்களை மட்டுமல்லாது பிற இனத்தவர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளதாகவே நண்பன் குழு கருதுகின்றது. ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப்பள்ளி, ஷா பண்டார் இடைநிலைப்பள்ளி மாணவர்களை உட்படுத்தியதாகக் கருதப்படும் பிறந்தநாள் கொண்டாட்டம் இடை நிலைப்பள்ளி இந்திய மாணவர்களிடையே குண்டரிய நடவடிக்கைகள் ஆல் போல் செழித்து பரவியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மலேசிய இந்தியர்களிடையே குண்டரிய நடவடிக்கைகள் பெருகி வருவதாகக் கூறப்படும் தகவல்களுக்கு மத்தியில் மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய சமூகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல் எதிர் கால தலைமுறையினரின் எதிர் காலத்தையே பதம் பார்த்து விடக்கூடிய அபாயம் வீட்டு வாசலிலேயே நிற்பதைக் காண்பதற்கு வேதனையே மிஞ்சுவதாக நண்பன் குழு கருதுகின்றது. எய்தவன் இருக்க அம்பை நோவதா? இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களிடையே புரையோடிக் கிடக்கும் குண்டரிய நடவடிக்கைகள் ஒன்று புதிதான ஒன்றல்ல. பல ஆண்டு களாகவே இவ்வாறான இழிவான சம்பவங்கள் இடைநிலைப்பள்ளிகளில் நடந்து வருவதைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. * இடைநிலைப்பள்ளிகளின் தலைமைத்துவத்திற்கு இவ்விவகாரம் தொடர்பில் அக்கறையே இல்லை. * இடைநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு காவல் துறை அதிகாரிகளுக்கு நேரமும் இல்லை. * சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் அரசியல் கட்சிகளுக்கு இவ்விவகாரம் பெரிதாகப் பட்டதும் இல்லை. * பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிவதற்கான வாய்ப்புகளும் இல்லை. போன்றவற்றையே நாம் காரணமாகக் கூறினாலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மூலகர்த்தா யார்? என்பதையே காவல் துறையினர் கண்டறிய வேண்டும் என்பதை ஏவுகணை வலியுறுத்துகின்றது. இடைநிலைப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இனவாதமான செயல்பாடுகளே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் நண்பன் குழு கருதுகின்றது. கிள்ளானில் நடைபெற்றுள்ள சம்பவம் மிகப்பெரிய பனிப்பாறையின் சிறு துளி யாகவே ஏவுகணை கருதுகின்றது. கைது செய்யப் பட்டி ருக்கும் மாணவர்கள் வெறும் அம்பு மட்டுமே எய்தவர்கள் யார் என்பதை அறிந்து துடைத்தொழித்தால் மட்டுமே இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை ஏவுகணை வலியுறுத்துகின்றது. மலேசிய காவல் துறையின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தனது செய்தியின் வழி கிள்ளானைச் சேர்ந்த ஸ்ரீ அண்டலாஸ் இடை நிலைப்பள்ளி ஷாபண்டார் இடைநிலைப்பள்ளி, ராஜா ஹாடி இடைநிலைப்பள்ளி, கம்போங் ஜாவா இடைநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அறிய முடிவதாகக் கூறியுள்ளது. இந்திய சமூகத்தினரிடையே மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்தியிருப்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. ஏவுகணையின் ஆய்வின் படி மேற்கொண்ட நான்கு இடைநிலைப்பள்ளிகளிலும் 60 விழுக்காட்டிற்கு அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயில்வதாக (ஷாபண்டாராயா இடைநிலைப்பள்ளியைத் தவிர) அறிய முடிகின்றது. இந்திய மாணவர்கள் அதிகமாகப் பயிலும் இடைநிலைப்பள்ளிகளில் குண்டரிய நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் மேலோங்கியே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாலும் அனைத்து சம்பவங்களும் இதுநாள் வரை மறைக்கப்பட்டே வந்துள்ளதாக ஏவுகணை கருதுகின்றது. குண்டரிய நடவடிக்கை சாபாமா? திணிப்பா? மலேசிய இந்தியர்களிடையே 1980 ஆம் ஆண்டுகளில் ஊடுருவிய குண்டரிய செயல்பாடுகள் சாபத்தினால் ஏற்பட்டது அல்ல என்பதை ஏவுகணையால் நிரூபிக்க முடியும் குண்டர் கும்பல்களில் இந்தியர்களின் ஈடுபாடு திணிக்கப்பட்ட ஒன்றாகவே ஏவுகணை கருதுகின்றது. இதற்கு மூல காரணமே நமது அரசாங்கம் என்பதில் பிழை இருக்குமா? என ஏவுகணை கேட்கின்றது. * தோட்டப்புறங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் எதுவுமே இல்லாமல் கட்டாய இடப்பெயர்வு செய்யப்பட்ட கோரம். * நகர முன்னோடிகளாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத புறம்போக்கு வாசிகளாக உருமாற்றம் கண்ட அவலம் * எத்தகைய தொழில்திறன் அனுபவமும் வழங்கப்படாமல் கூலிகள் சமூகமாக உருமாற்றிய ராஜதந்திரம் * சமூகத்தின் அவலத்திற்குத் தீர்வினைக் காண அறவே சிரத்தை எடுக்காத அரசியல் பிரதிநிதித்துவத்தின் சாபக்கேடு * மலிவு விலை சாராயத்தின் புழக்கத்தினை தடங்கல் இல்லாமல் பயனீடு செய்த சாமர்த்திய வர்த்தகர்கள். * புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளையும் அபகரித்துக் கொண்டு நட்டாற்றிலும் சிலரை புறாக்கூண்டுகள் போன்ற வீடுகளிலும் தஞ்சமடையச் செய்த மேம்பாட்டு நிறுவனங்களின் வியூக நடவடிக்கைகள் என ஒட்டு மொத்தமாக இந்திய சமூகம் நடப்பு நடைமுறைகளால் பலிவாங்கப்பட்டுள்ளதை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் உணர்ந்திருந்தாலும் ஒற்றுமை எனும் பிரம்மாஸ்திரத்தைத் தொலைத்து விட்ட இந்திய சமூகம் இன்றைய இளைய தலை முறையினரை குண்டரிய நடவடிக்கைகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருப்பதை யாராவது மறுக்க முடியுமா? அல்லது வேறு காரணத்தைத்தான் கூற இயலுமா? சமூகத்தின் இயலாமையின் பிரதிபலிப்பே குண்டரியம் சமூகப் பொருளாதார இன்னல்களால் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமூகத்தினரிடையே மிகவும் எளிதில் குண்டரிய நடவடிக்கைகள் வசப்படுவதை ஆய்வு செய்ய வேண்டியதில்லை. 1960- 1970 ஆம் ஆண்டுகளில் குண்டரிய நடவடிக்கைகள் சீன சமூகத்தினரிடையே தலைவிரித்தாடியதை ஏவுகணை இன்னமும் மறக்கவில்லை. பொருளாதார நிலையில் நிலைத்தன்மையைப் பெற்றுவிட்ட அச்சமூகத்தில் இன்றைய சூழலில் குண்டரிய நடவடிக்கைகளின் வெளிப்பாடுகள் கட்டுப் பாட்டுக்குள் இருப்பதாகவே அறிய வேண்டியுள்ளது. 1980 ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தினரிடையே வேர்விடத் தொடங்கிய குண்டரிய நட வடிக்கைகள் இன்றளவில் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களைப் பதம் பார்த்திருப்பதைக் கண்கூடாகவே கடந்த வியாழக்கிழமை கிள்ளானில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் வழி அறிந்துள்ளோம். மேற்கண்ட அசம்பாவிதம் கிள்ளானில் மட்டும் தலைவிரித்தாடவில்லை மாறாக நாடு தழுவிய நிலையில் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இடைநிலைப்பள்ளிகளிலும் குண்டரிய நடவடிக்கைகளுக்கான தடயங்களைக் காண முடியும் என்பதை ஏவுகணையால் நிரூபிக்க முடியும். இந்திய சமூகத்தினரிடையே செல்லரித்து வரும் சமூகப் பொருளாதார இன்னல்களே சமுதாயத்தினைப் பதம் பார்த்து வருவதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் நமது சமூகத்தின் சாபமா? என்பதை நாளை ஆராய்வோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img