புதுடில்லி : இது திமிரான அரசு. மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறார் என காங்., தலைவர் சோனியா, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் விவகாரத்தில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பார்லி., கூட்டத் தொடர் துவங்கி நாள் முதலே காங்., உறப்பினர்கள் இருஅவையைகளையும் முடக்கி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் காங்., எம்.பி.,க்கள் 25 பேரை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். எம்.பி.,க்களின் சஸ்பெண்டை எதிர்த்து காங்.,ன் முக்கிய தலைவர்கள் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 6) காங்., தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. கட்சி தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் தலைமையில் காங்., உறுப்பினர்கள் கறுப்பு கொடி ஏந்தியும் , கறுப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இது திமிரான அரசு. வடகிழக்கு மாநில முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் எப்படி நாகாலாந்து அமைதி உடன்படிக்கையில் கையெழுதிட்டனர்? இது திமிரான அரசு என்பதற்கு இதுவே உதாரணம். இதனால் நேரடியாக பாதிக்கப்பட கூடியவர்கள் அம்மாநில முதல்வர்கள் தான். அவர்களின் நம்பிக்கையை பெறாமல் பிரதமர் தன்னிச்சையாக முடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது வரலாற்று சிறப்பு மிக்க உடன்படிக்கையாகவே இருக்கட்டும். அதற்காக மணிப்பூர், அசாம், அருணாச்சல் மாநில முதல்வர்களின் ஒப்புதலை கேட்க கூடாதா? நாகாலாந்து அமைதி உடன்படிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். பிரதமரின் இந்த செயல் வடகிழக்கு மாநில முதல்வர்களை அவமதிக்கக் கூடியது என காங்., துணைத் தலைவர் ராகுலும் குற்றம்சாட்டினார்.