img
img

தேவமணி-மோகனா குடுமிச் சண்டை!
புதன் 15 மார்ச் 2017 12:47:33

img

பொதுத்தேர்தல் நெருங்கி வருவதற்கான அறிகுறியாக மக்கள் சந்திப்பில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ள வேளையில், தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளில் ஒன்றான ம.இ.கா. வில் தொகுதிகள் போராட்டமும் தொடங்கி விட்டது. குறிப்பாக, பகாங் மாநிலத்தில் உள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனை போராட்டம் நிலவுவது அங்குள்ள வாக்காளர்களே குழம்பிப்போகும் அளவிற்கு உள்ளது. அந்த தொகுதி யாருக்கு என்பதில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கும், மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டிக்கும் இடையே ‘குடுமிச் சண்டை’ உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அது மட்டுமின்றி, தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்புக் கட்சியின் தலைவரும் அங்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது தங்களை குழப்புவதாக உள்ளது என அங்குள்ள வாக்காளர்கள் கூறுகின்றனர். மோகனா முனியாண்டி தனது மகளிர் படையோடு அங்கு களமிறங்கி, மக்களை சந்திப்பதிலும் உதவிகளை செய்வதிலும் மும்முரம் காட்டி வருகிறார். சில மாதங்களாகவே இது நிகழ்ந்து வருகிறது. இங்கு அவர் புரியும் சேவைகள் தொடர்பான நிழற்படங்களும், தகவல்களும் அவரின் முகநூல் பக்கத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கேமரன் மலையில் மோகனா முகாமிட்டிருப்பதற்கு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அனுமதி அல்லது ஒப்புதல் வழங்கியிருக்கிறாரா? அல்லது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இத்தொகுதி ம.இ.கா.வுக்கு தான் என்பதை உறுதி செய்துள்ளாரா? தங்களுக்கு தெரிந்த வரை அப்படி ஏதும் இல்லை என்று கட்சியின் மேல்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. அத்தொகுதி தனக்குத்தான் என்ற ஒரு முடிவில் மோகனா கேமரன் மலையில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டாக்டர் சுப்பிரமணியம் எதுவும் வாய் திறக்காமல் இருக்கின்றார். அதேசமயம், டத்தோஸ்ரீ தேவமணியும் இத்தொகுதியில் போட்டியிடுவதில் முனைப்புக் காட்டுவதாக அவ் வட்டாரங்கள் மலேசிய நண்பனிடம் தெரிவித்தன. அந்நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பிரதிநிதியாக இருக்கின்றார். எனினும், கட்சியில் அவர் இடம்பெறவில்லை என்பதால் கேமரன் மலை தொகுதி சுயேச்சை தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனிவேல் சுயேச்சை வேட்பாளராக அங்கு மீண்டும் போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கோடி காட்டியுள்ள போதிலும், அங் குள்ள அம்னோவிற்கும், மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஹாஜி அட்னான் யாக்கூப்பிற்கும் இதில் உடன்பாடு கிடையாது என்று தெரிய வருகிறது. பழனி வேல் அங்கு மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவு கிடைக்காது என்றே பொதுவாக சொல்லப்படுகிறது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி கடந்த 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் முதல் முறையாக தேர்தல் 2004-ஆம் ஆண்டில் நடை பெற்றது. அப்போது தேசிய முன்னணி வேட்பாளராக தேவமணி ம.இ.கா. சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து ஜ.செ.க.வின் அப்பளசாமி போட்டி யிட்டார். இக்கால கட்டத்தில் இங்கு பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை 23,061 ஆகும். எனினும், 15,202 பேர் மட்டுமே வாக்களித்தனர். தேவமணி மொத்தம் 10,226 வாக்குகள் பெற்று 6,260 பெரும்பாண்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்பளசாமிக்கு 3,966 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது 2004-ஆம் ஆண்டின் நிலவரம். அடுத்து, 2008-ஆம் ஆண்டிலும் தேவமணியே அங்கு மீண்டும் போட்டியிட்டார். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 23,461 என்றாலும், 16,456 பேர் மட் டுமே வாக்களித்தனர். மொத்தம் 9,164 வாக்குகள் பெற்று 3,117 பெரும்பாண்மையில் தேவமணி தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். அவரை எதிர்த் துப் போட்டியிட்ட அப்பளசாமிக்கு 6,047 வாக்குகள் கிடைத்தன. 2013-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேவமணி, வழக்கமாக கட்சியின் தேசியத் தலைவர் போட்டியிடும் சுங்கை சிப்புட் தொகுதிக்கு மாற்றப்பட்டார். கட்சியின் அப்போதைய தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கேமரன் மலை தொகுதியில் வேட்பாளராக நின்றார். முடிவில், தேவமணி சுங்கை சிப்புட்டில் தோற்றுப் போனார். பழனிவேல் கேமரன் மலையில் வெற்றி பெற்றார். எனினும், மிகக்குறைவாக 462 வாக்குகள் பெரும்பாண்மையில் மட்டுமே பழனிவேலால் இங்கு வெற்றி பெற முடிந்தது. அவருக்கு 10,506 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜ.செ.க.வின் மனோகரன் மாரிமுத்துக்கு 10,044 வாக்குகளும் கிடைத்தன. மொத்தம் 27,980 வாக்காளர்கள் அப்போது இங்கு பதிவாகியிருந்த போதும், 22,754 பேர் மட்டுமே வாக்களித்தனர். இம்முறை ம.இ.கா.வுக்கு கேமரன் மலை பாதுகாப்பான ‘சீட்’தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அங்குள்ள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை விரும்பு வதாகவும் அம்னோ வட்டாரங்களும் இதையே வலியுறுத்துவதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகவே, இந்த முறை கேமரன் மலை தொகுதி ம.இ.கா.வுக்கு கொடுக்கப்படும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை என்று அவை தெரிவித்தன. கேமரன் மலை தொகுதி தேவமணிக்கா, மோகனாவுக்கா அல்லது அது அம்னோவுக்கு கைமாறுமா என்பது வெகு விரைவில் தெரிந்து விடும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img