img
img

இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி
வெள்ளி 21 செப்டம்பர் 2018 16:11:02

img

இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய அரசின் கொள்கைக்கு இது எதிரானதல்லவா என்று வினா எழுப்பி திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடு த்துள்ள அறிக்கை  வருமாறு:

''விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூசிய'' பேச்சாகும்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய சனாதன தர்மத்தின் பாதுகாவல் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்கள் டில்லியில் பேசிய மூன்று நாள் உரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது மற்றவர்கள் வைக்கும் வகுப்புவாத, மதவாத, ஜாதி வாதங்களை ஏற்காமல், விளக்கம் அளிப்பதற்காக - நாம் நேற்றே குறிப்பிட்டதுபோல, விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூசிய பேச்சேயாகும்!

நாடு முழுவதும் அதனைப் புரிந்துகொள்ள அத்தனைப் பேரும் முன்வந்துவிட்டார்கள்; அதன் வளர்ச்சி, தேச நலன் என்ற முகமூடிகள் கழன்று விட்டன என்பதால், புதிதாக இப்படி ஒரு புதிய போக்குக் காட்டி தீரவேண்டிய நெருக்கடி - அண்மையில் வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், அதற்கடுத்து 2019 பொதுத் தேர்தல் - இவைகளில் தங்களுக்கு வாக்காளர்களின் ஆதரவு கிட்டாது என்றே புரிந்து இப்போது சில ‘‘வார்த்தை ஜால’’ ‘‘உத்திகளிலும்‘’, ‘‘வித்தைகளிலும்‘’ இப்படி ஈடுபட்டு வாக்காளர்கள் கண்களில் மண்ணைத் தூவி அவர்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டைப் பறிப்பதற்கான சூழ்ச்சி ஏற்பாடேயாகும்!

மதச்சார்பின்மையும் - இந்துராஜ்ஜியமும் ஒன்றா?

‘‘மதச்சார்பின்மையை - அரசியல் சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், இந்தியாவில் உள்ள அத்தனைப் பேரும் இந்துக்களே - இந்துத்துவாவை - இந்துராஷ்டிரத்தை ஏற்படுத்தவேண்டும். இந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. அது கவலையளிக்கிறது; அது தடுக்கப்பட்டாக வேண்டும்‘’ என்கின்றனர். இந்தியாவை ஏற்றால், அதில் ஏன் மத ரீதியான மக்கள் தொகை பார்வை உள்ளே நுழைகிறது. இது ஒரு சுய  முரண்பாடு அல்லவா?

இந்து மக்கள் எண்ணிக்கை குறைந்தால் என்ன?

பெருகிவரும் இந்திய நாட்டின் மக்கள் தொகை, சீனாவையும் தோற்கடிக்கக் கூடிய அளவுக்கு வந்துவிடுமோ என்ற அரசின் கொள்கை ரீதியான கவலை இருக்கும்போது, இதில் குறிப்பிட்ட மதம் இந்து மதம் மட்டும் பெருகிடவில்லையே என்று கவலை காட்டுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது? இதுதான் தேச நலன் காப்பா?

மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு கொள்கைக்கு விரோதமல்லவா? இதில் மதப் பார்வையா முக்கியம்? மனிதகுல - நாட்டு வளர்ச்சிப் பார்வையல்லவா முக்கியம்?

பிரச்சினைக்குத் தீர்வு அல்ல - சிக்கலே!

முஸ்லிம்கள் விரோதிகள் இல்லையாம்! தேச ஒற்றுமைக்கே முன்னுரிமை என்றால், இராமனுக்கு கோவில் கட்டவேண்டுமாம்! அதுவும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே என்பதும், இதனை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் என்பதும், காஷ்மீர் மாநிலத்திற்குரிய தனி அந்தஸ்து தரும் 370 ஆவது அரசியல் சட்ட விதி நீக்கம் - 35-ஏ பிரிவு நீக்கம் கோருவதும், - இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று கூறுவதும், பிரச்சினைக்குத் தீர்வா? அல்லது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதா? பெட்ரோலை ஊற்றியா தீயை அணைப்பது?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனநாயக அமைப்பாம்! என்னே வேடிக்கை?

அப்படியானால், 1925 முதல் இதுவரை அதன் முக்கிய தலைவராக வந்தவர்கள் அத்தனைப் பேரும் மகாராட்டிர பார்ப்பனர்களே - அதுவும் சித்பவன் பார்ப்பனப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக அமைந்தது எப்படி? (ராஜேந்திர சிங் என்பவரின் பதவிக்காலம் ஒரு சிறு இடைவெளி).

ஆர்.எஸ்.எசுக்குச் சட்ட திட்டங்கள் எப்பொழுது வந்தது?

1948 இல் காந்தியாரை கோட்சே சுட்ட போது வி.டி.சவர்க்கார் போன்றவர்கள் அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஆன நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டபோது, கோல்வால்கரை நோக்கி பிரதமர் நேரு, உங்கள் அமைப்புக்கென சட்ட திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கைக்கூட ஏதும் கிடையாதே என்று சுட்டிக்காட்டிய பிறகு (‘எச்.வி.ஆர்.அய்யங்கார் - கோல்வால்கர் கடிதங்கள்’ சிறையில் இருந்தபோது எழுதியவைகளே சான்று) தானே எழுதப்பட்ட சட்ட திட்டங்கள்!

லவ் ஜிகாத் என்பது என்ன?

கலப்புத் திருமணத்தை எதிர்க்கமாட்டார்களாம்; (ஆதரிப்போம் என்று கூறவில்லை என்பதை கவனிக்கவேண்டும்) அப்படியானால், ‘‘லவ் ஜிகாத்’’, ‘‘பசுப் பாதுகாவலர்கள்’’ என்ற சொற்றொடர் போன்ற புதிய சொல்லாட்சிகள் எப்படி வந்தன? யாரிடமிருந்து கிளம்பின?
மகளிருக்கு இப்போதும்கூட அந்த அமைப்பில் தலைமைத்துவ வாய்ப்பு உண்டா? ‘‘சேவிகா அமைப்பு’’ கூட பின்னால் (1935) ஏற்படுத்தப்பட்டதுதானே!

இட ஒதுக்கீடு - திடீர் பல்டி!

இட ஒதுக்கீடுபற்றி ‘திடீர் பல்டி’ எப்போது அடித்தார் மோகன் பகவத் - 2015 இல் பீகார் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பிறகுதான் ‘360 டிகிரி’-க்கு நேர்மாறாக மாறி அதுவும் மோடி - பா.ஜ.க.வினருக்கு அங்கே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகத்தானே!

மண்டல் கமிஷன் பரிந்துரையில் ஒன்றே ஒன்றை வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமுல்படுத்தியதைக்கூட சகிக்காமல் - ஏற்காமல்தானே 10 மாதங்களில் அவரது ஆட்சிக்கு வெளியேயிருந்து அவரது ஆட்சிக்கு பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தந்த ஆதரவினை வாபஸ் பெற்று, அவரது ஆட்சிக்காகவே கவிழ்த்ததை எளிதில் மக்களுக்கு மறந்து போய்விடுமா?

முன்பு தந்தை பெரியார் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் சொன்ன அதே கருத்து இன்றுள்ள ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பனிய அமைப்புக்கு 100-க்கு 100 பொருந்தும்.

நீதிமன்றத்திலேயே தந்தை பெரியார் சொன்னது!

‘‘வாயில் - நாக்கில் குற்றமிருந்தால் ஒழிய தேன் கசக்காது; வேம்பு இனிக்காது. பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய - புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைக் கடிக்காது. அதுபோலவாக்கும் நம் நாட்டுப் பார்ப்பனர் தன்மை.’’ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img