img
img

‘தி.மு.கவைப் புதிதாகத்தான் தொடங்க வேண்டுமா?’
புதன் 26 ஏப்ரல் 2017 19:02:24

img

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியின்போது, கட்சி நிர் வாகிகளின் செயல்பாடுகளால் அதிர்ந்து போய்விட்டார் ஸ்டாலின். எனவே, கட்சியை சீரமைப்பது குறித்த ஆய்வுக்காக மாவட்டச் செயலாளர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். சென்னை, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரிடம் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டவர்கள் வாழ்த்து பெறும் படங்கள் மட்டுமே வெளியாயின. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற அறிக்கைகள் எதுவும் அவரிடம் இருந்து வருவதில்லை. "தமிழக அரசியலின் முக்கியமான இந்தக் காலகட்டத்தில், அவருடைய பங்களிப்பு இல்லாமல் இருப்பதையும் தி.மு.க தொண்டர்கள் வேதனையுடன் கவனிக்கின்றனர். “கருணாநிதி இருந்திருந்தால், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும்’ என நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனை செயல் தலைவர் ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதேநேரம், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்” என விளக்கிய தி.மு.க நிர்வாகி ஒருவர், “பொதுவாக, கட்சி மாநாடுகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் தி.மு.க தொண்டர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கும். தி.மு.க போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கும். ஆனால், நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்தில் தி.மு.கவினரின் அக்கறையின்மை ஸ்டாலினை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. மாநிலத்தையே பாதிக்கும் முக்கிய விஷயம் ஒன்றுக்காக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு தி.மு.கவில் எந்த வீரியமான களச் செயல்பாடுகளையும் காண முடியவில்லை. போராட்டத்தில் கைதானவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். நேற்று போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, கட்சி நிர்வாகிகள் சிலர் தொழிலைக் கவனிக்கச் சென்றதையும் கணக்கில் வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஆளும் கட்சியினரோடு தொடர்பில் இருப்பவர்கள் பட்டியலையும் அவர் சேகரித்து வருகிறார். அரசியல் முடிவுகள் தொடர்பாக, அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் விவாதிக்கும் தகவல்கள் எல்லாம் எதிர் முகாமுக்குச் சென்றுவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் வியூகம் உள்பட தி.மு.கவினரின் செயல் திட்டங்கள் அனைத்தும் எதிர் முகாமுக்குச் சென்றுவிட்டது என்ற தகவலால் கொதிப்பில் இருக்கிறார் ஸ்டாலின். எனவே, 'நமக்குள் இருக்கும் கறுப்பு ஆடு எது?' என்ற தேடுதலில் இருக்கிறார். தவிர, எந்த ஒரு விழா என்றாலும், பழைய கட்சிக்காரர்களைப் பார்ப்பதும் அரிதாகிவிட்டது. மேடையில் அமரும் ஆட்களில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி தவிர, மீதம் உள்ள நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அடையாளமாக பலர் இருப்பார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. 'தி.மு.க முகங்களையே பார்க்க முடிவதில்லை' என்ற ஆதங்கத்தை பலரும் வெளிப்படுத்திவிட்டனர். இப்படியே போனால், மீள முடியாத நிலைக்குக் கட்சி சென்றுவிடும் என்பதால்தான், நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக. “மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, ஒன்றிய, நகர செயலாளர்களை வைத்து கூட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வார்டு வாரியாக கட்சி நிலைமையை அறியும் பணிகள் நடக்க இருக்கின்றன. இந்த ஆய்வுக்குப் பிறகு, எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் சுணக்கமாக இருக் கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய இருக்கிறார். ஆர்.கே.நகர் தேர்தல் களம்தான் அவருக்குள் பல மாற்றங்களை ஏற்படுத் தியது. அங்கு தேர்தல் பணிக்காக வந்தவர்கள் யாரும் சிறப்பாக வேலை பார்க்கவில்லை. இதனால் கொதித்துப் போனவர், ' தேர்தல் பணிகளில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால், மீண்டும் புதிதாகக் கட்சியைத் தொடங்க வேண்டும் போல் இருக் கிறது. உங்கள் பணிகளில் நான் திருப்தி அடையவில்லை' என நேரிடையாகவே கூறிவிட்டார். இதன் ஒரு பகுதியாகத்தான் நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூடுகின்றனர். வரக் கூடிய நாட்களில் பல மாற்றங்கள் நடக்க இருக்கின்றன" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img